அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ போராட்டம்!

முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி, இன்று SDPI கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற தொனியில் காட்சிப்படுத்தியிருப்பதாக எஸ்டிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கும் இந்த திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பாராட்டியது, ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புக் குரல்களை அவர் மௌனியாக்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, அமரன் படத்தை தடை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ஜங்ஷன் பகுதியில் உள்ள சோனா மீனா திரையரங்கை மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி தலைமையிலானஎஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதேபோல் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஷரீப் பாஷா தலைமையில், ஐந்து ரோடு பகுதியில் உள்ள கஸ்தூரி சினிமாஸ், கௌரி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, தென்காசியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையிலும், ராமநாதபுரத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் தலைமையிலும் அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கக்கூடிய திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.