பாலஸ்தீன அதிகார சபையின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாற்றியுள்ளார்.
2வது முறையாக அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச அளவில் சட்டப்பூர்வமான மற்றும் நியாயமான சமாதான உடன்படிக்கையை எட்ட டிரம்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், “போரை நிறுத்தப் பாடுபடுவேன்” , “மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்றும் தெரிவித்ததாகவும், அரபு அமெரிக்கர்களின் தேசியத் தலைவராக இருந்த பிஷாரா பஹ்பா தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்து வந்தது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் போர்களை நிறுத்துவேன் என டிரம்ப் பேசியிருந்தாலும், இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து எவ்வித விமர்சனமும் செய்யாமல் மெளனம் காத்து வந்தார். இந்நிலையில் டிரம்ப் போரை நிறுத்த பாடுபடுவேன் என பேசியுள்ளது எவ்வளவு அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






Leave a Reply