ஈரானுடன் கரம் கோர்க்க தயாராகும் சவூதி அரேபியா!

அமெரிக்கா – இஸ்ரேலுடனான நெருக்கம் சவூதி அரேபியாவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக தனது பரம எதிரியான ஈரானுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை சவூதி அரேபியா தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஓபனாக ஆதரவு தெரிவித்ததால், அந்நாட்டுடனான சுமூக உறவில் சவூதி அரேபியா சுணக்கம் காட்ட ஆரம்பித்தது. இந்நிலையில் 2வது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டிரம்பும், தேர்தல் பிரச்சாரத்தின் போதோ அல்லது வெற்றி உரையின் போதோ ஒருமுறை கூட இஸ்ரேலுக்கு எதிராக வாய் திறக்காதது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்தது.

குறிப்பாக இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் ஆதரவு, சவூதி அரேபியாவிற்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது எதிரி நாடான ஈரானுக்கு நட்பு கரம் நீட்ட சவூதி அரேபியா முடிவெடுத்துள்ளது. காலங்காலமாக ஈரான் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், சவூதி அரேபியா அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தன. ஆனால் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க ஆயுத உதவிகளைச் செய்தது சவூதி அரேபியாவிற்கு அதிருப்தி அளித்தது. இதனால் எதிரிக்கு, எதிரிக்கு நண்பன் என்பது போல் ஈரானும், சவூதி அரேபியாவும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளன.

இதற்கான முதற்கட்டமாக பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவூதி அரேபியாவின் ஆயுதப் படைகளின் பொதுத் தலைவர் ஃபயாத் அல்-ருவைலி தற்சமயம் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அங்கு ஈரான் அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் டிரம்பின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள இத்தருணத்தில், ஈரான் – சவூதி இடையிலான பேச்சுவார்த்தை அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

ஏற்கனவே காசாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரானை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பும் கிடைத்தால் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு இது பேரிடியாக அமையும்.