வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளதாக காமெனி தெரிவித்துள்ளார். இது ஒரு விவேகமற்ற மிரட்டல் என காமெனி கூறியுள்ளார்.ஈரான் பல்கலைக்கழக மாணவர்களின் இப்தார் நிகழ்ச்சியில் பேசிய காமெனி, ஈரான் திருப்பித் தாக்கும் வல்லமை படைத்தது எனக் கூறியுள்ளார்.இந்த நபருடன் இதற்கு முன்பு பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தினோம், பிறகு ஒப்பந்தம் போட்டோம், பிறகு அந்த நபரே ஒப்பந்தத்தை கிழித்து வீசிவிட்டார். இப்போது மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார் என டிரம்பை கிண்டல் செய்தார் காமெனி.
அமெரிக்காவுடன் இனி பேசுவது, தடைகளை நீக்க உதவாது. மாறாக தடை என்ற கயிறு இன்னும் இருகவே செய்யும்.
நாம் அணுகுண்டு தயாரிப்பதற்காக யூரேனியத்தை செரிவூட்டவில்லை. மின் தேவைக்காகவே செரிவூட்டுகிறோம். ஒரு வேலை நாம் அணுகுண்டு தயாரிக்க எண்ணினால் கூட அதனை அமெரிக்காவால் தடுக்க முடியாது. ஆனால் நாம் தான் அதனை விரும்பவில்லை.ஈரான் முன் எப்போதையும் விட இப்போது வலிமையாக உள்ளது. எதிரிகள் நாம் பலவீனமாக இருப்பதாக நினைக்கின்றனர். கடந்த வருடம் நம்மிடம் இல்லாத ஆயுதங்கள் தற்போது நம்மிடம் உள்ளன.ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைஸி, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது டெயிஃப், யஹ்யா சின்வர் ஆகியோரின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. நமக்கு பெரும் பின்னடைவு. என்றாலும், நாம் தொடர்ந்து போராளிக்குழுக்களை பலப்படுத்தி வருகிறோம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பேசியுள்ளார்.





