காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் நாடுகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனிடையே எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. அதில் காசாவை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செலவில், 2 ஆண்டுகளில் மறு கட்டமைப்பு செய்வது, காசாவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவது, போன்ற பல முன்மொழிவுகளை கூறியது. இதனை பரிசீலிப்பதாக ஹமாஸ் அமைப்பும் கூறியுள்ளதாக அமெரிக்கா ஊடகங்களிடம் கூறியுள்ளது. எனினும் ஹமாஸ் இது குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறாமல் இருந்து வருகிறது.
இதனையொட்டி, அமெரிக்காவே நேரடியாக ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதுவே, இஸ்ரேலுக்கு பேரிடியாக அமைந்தது. இந்தச் சூழலில் அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்டினை டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, டிரம்பிடம் காசா மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், காசாவில் இருந்து, யாரையும், யாரும் வெளியேற்றப் போவதில்லை என அறிவித்தார்.
இது அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேலை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.https://www.timesofisrael.com/liveblog_entry/hamas-official-welcomes-trumps-assertion-that-no-gazans-will-be-expelled/
இதனிடையே டிரம்பின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. இதுகுறித்து அறிக்கை அளித்துள்ள, ஹமாசின் செய்தித் தொடர்பாளர் ஹாசெம் காசிம், தீவிர யூத வலதுசாரிகளின் நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் பின்வாங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.





