“போர் நிறுத்தத்திற்கு முன்மொழியவில்லை” – ஹிஸ்புல்லா செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

போரை நிறுத்த வேண்டும் என்ற எந்த முன்மொழிவையும் போராட்டக்காரர்கள் விடுக்கவில்லை என்றும், நீண்ட போரை நடத்த தேவையான ஆயுதங்கள் தங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மொஹெட் அஃபிஃப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானில் கடந்த 6 வாரங்களாக போரிட்டு வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தங்களது பகுதிகளை தக்கவைத்துக்கொள்ள தவறவிட்டதாகவும், கடந்த வாரம் தெற்கில் உள்ள கியாமி நகருக்குள் நுழைய முயன்ற ஆக்கிரமிப்பு படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தங்களிடம் இருந்த பெரும்பாலான ஏவுகணைகளை இழந்துவிட்டதாக இஸ்ரேல் பரப்பி வரும் தகவல்களை முற்றிலும் பொய் என மறுத்துள்ள அவர், மத்திய இஸ்ரேலைக் குறிவைத்து தினந்தோறும் டஜன் கணக்கான ஏவுகணைகளை தங்களால் ஏவ முடியும் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள பைனா நகரத்தின் மீது ஹிஸ்புல்லா நடத்திய சரமாரி ராக்கெட் தாக்குதலில் 40 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை 50 ராக்கெட்டுகளை ஏவி நடத்தியதாக ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளார்.