இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான 42 நாள் முதல் கட்ட போர் நிறுத்தம் மார்ச் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. 2ஆம் கட்ட பேச்சு வார்த்தைகளை தொடங்க நெதன்யாகு சுணக்கம் காட்டி வந்ததோடு, மீண்டும் போரை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார். இது இஸ்ரேலிய கைதிகள் குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசா மக்களுக்கும், இந்த புனித ரமலான் மாதம் எப்படி கழியப்போகின்றது என்ற கவலையை ஏற்படுத்தியது.இந்தச் சூழலில் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கக் கூடாது என தடலாடி உத்தரவை பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நண்பரும், மத்திய கிழக்கு ஆலோசகருமான ஸ்டீவ் விட்காஃப். 2ஆம் கட்ட போர்நிறுத்தம் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், முதல் நாளிலேயே ஹமாஸ் தன்னிடம் உள்ள கைதிகளில் பாதி பேரை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

ஏற்கனவே தோல்வியின் உச்சத்தில் இருக்கும் இஸ்ரேல் இதனை உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளதோடு, ரமலான் மாதம் 30 நாட்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து சுமார் 19 நாட்கள் PASS OVER காலக்கட்டத்தில் போர் நிறுத்தத்தை கடைபிடிப்பதாக அறிவித்துள்ளது.
இது இஸ்ரேலியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு, காசா மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ரமலான் மாதம் அவர்களுக்கு மிகக் கடுமையாக இருந்த நிலையில், இந்த ரமலான் மாதமும் அப்படி அமைந்து விடக் கூடாது என பிரார்த்தித்து வந்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு வெற்றி கிடைத்துள்ளது.அதே நேரம் கைதிகளில் பாதிப்பேரை ஒரே நாளில் விடுவிப்பது என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வது குறித்து, ஹமாஸ் அறிவிப்பை வெளியிடவில்லை.
முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 25 இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ், 8 உடல்களையும் ஒப்படைத்தது. அதே போல் இஸ்ரேல் சிறையில் வாடிய சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர்.
தற்போது காசாவில் 27 இஸ்ரேலிய கைதிகள் உயிருடன் உள்ளதாகவும், 32 கைதிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது 2ஆம் கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி வரை காசாவில் அமைதி நிலவும் என நம்பப்படுகிறது.






