ஈடு இணையில்லா இறை நம்பிக்கை

எங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து விட்டோம், வீடுகளை இழந்து விட்டோம், வாழ்வாதாரங்களை இழந்து விட்டோம், பள்ளிவாசல்களை இழந்து விட்டோம், ஆனால் எப்போதும் போல எங்கள் இறை நம்பிக்கையை நாங்கள் இழக்க வில்லை. அதில் உறுதியாக உள்ளோம் என்று அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் ஒரு காசா வாசி.சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடும் இன்னல்களை காசா வாசிகள் சந்தித்தாலும், 2014ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிக கொடூரமானது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2024 ரமலான் மாதத்தையும் அவர்களால் எளிதில் மறந்து விட முடியாது.15 மாதங்களாக நீடித்து வந்த ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகளின் தாக்குதல் இந்த வருடம் ரமலான் மாதத்திற்கு முன்பே முடிவுக்கு வந்திருப்பது, காசாவாசிகளை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.24 லட்சம் காசா மக்களில் 15 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலும் அவர்களது வீடுகள் முற்றிலுமாக இடித்து மண் மேடுகளாக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் போதிய அளவில் போர்வைகள் இன்றி கடும் குளிரில் தங்கியுள்ளனர். சிலருக்கு முகாம்கள் கூட இன்றி, திறந்த வெளிகளில் உள்ளனர்.சகர் எனப்படும் அதிகாலை உணவை தயாரிப்பதே பெரும் சவால் என்கின்றனர் காசா வாசிகள். காரணம் மின்சாரம், எரிவாயு சிலிண்டர்கள் இல்லை. காய்ந்த சறுகுகள், பேப்பர்கள் மூலம் தீ மூட்டி, உணவு சமைக்கின்றனர். தூய்மையான குடிநீர் என்பது எட்டா கனவு என்கின்றனர்.இப்படியாக கிடைக்கும் உணவுகளை கொண்டு, சகர் உணவு தயாரித்து, நோன்பு வைக்கின்றனர். பிறகு, இப்தாரின் போதும், வழக்கமாக சாப்பிடும் பாரம்பரிய பாலஸ்தீனிய உணவுகளை இந்த முறை தங்களால் தயாரிக்க முடியவில்லை என்கின்றனர்.
எனினும் உறுதி குலையாத இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக, தொழுகை, நோன்பு ஆகியவற்றை முறையாக கடைபிடித்து வருகின்றனர். சில தன்னார்வலர்கள், இடிந்த வீதிகளில் மின் சீரியல் லைட்டுகள், தோரணங்கள் கட்டி, மக்களிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.