சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹவுத்திப் படைகள் மீண்டும் கடற் தாக்குதல்களை தொடங்கிய நிலையில், இந்த ஒத்திகை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.Maritime Security Belt 2025 என்ற பெயரில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே ஓமன் வளைகுடாவில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இந்த வழியாகவே உலக எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கடந்த முறை டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த போது, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென வெளியேறி, பல தடைகளை விதித்தார். அப்போது, இந்த ஹோர்முஸ் நீரிணை பகுதியில், எதிரி நாடுகளின் வர்த்தக கப்பல்களை ஈரான் பறிமுதல் செய்தது.எனினும் இந்த கடற் ஒத்திகை நிகழ்ச்சியானது, 5வது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த ஒத்திகையின் போது, ஜிபிஎஸ் சிஸ்டத்தை ஈரான் ஹேக் செய்து வைத்ததால், அப்பகுதியில் சென்று வந்த கப்பல்கள் பல மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தியதாகவும், பிறகு அது சரிசெய்யப்பட்டதாகவும் பிரிட்டன் கடற்படை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.





