இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு ஆளாகக்கூடும் என்றும், நோய் மற்றும் பசியால் ஏராளமானோர் உயிரிழக்ககூடும் என்றும் சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.
வடக்கு காசாவில் கடும் பஞ்சம் ஏற்படக்கூடும் என்பது மிகுந்த கவலை அளிப்பதாகவும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபைக்கான அல்ஜீரியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்மார் பெஞ்சமா வடக்கு காசாவில் ஏற்படவுள்ள பஞ்சம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தார். அம்மார் தனது உரையின் போது, “இஸ்ரேல்” பட்டினியை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதால், எஞ்சியிருப்பதைக் காப்பாற்ற ,காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கயானா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்துடன் ஆகிய நாடுகளும் இதே கோரிக்கையை முன்வைத்ததால், அதனை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பஞ்ச ஆய்வுக் குழுவின் அறிக்கையை பின்பற்றி காசாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Leave a Reply